Wednesday, March 07, 2007

DD Vs Nimbus

ஏற்கனவே நொந்து போய் இருக்கறவங்கள நானும் சேர்ந்து தொல்ல பண்ண வேணாம்கற நல்லெண்ணத்துல(??!!) நம்ம கடைய பூட்டி சாவிய எங்கிட்டோ போட்டு ரொம்ப நாள் ஆச்சுங்க.. மத்த கடைய அப்பப்ப பாத்து ஏதாவது சில்லறையா வாங்கறதோட சரி.. அதுவும் இப்ப ஒரு கடையில 30 க்கு மேல பப்ளிக்கா வாங்க கூடாதுன்னு வேற சொல்லிட்டதால, நல்லாதா நாலு பெரு அந்த 30அ வாங்கட்டும்னு விட்டுடறதும் உண்டு..

ஆனா பாருங்க பூட்டியிருந்த நம்ம கடைக்கும் நெத்து ஒருத்தர் விஸிட் கொடுத்தாரா... இன்னைக்கு செய்தியில கேட்ட ஒரு விஷயம் வேற எரிச்சல கிளப்பிடுச்சா.. சரி இத பத்தி நம்ம ஆளுங்க என்னா நினைக்கிறாங்கன்னு கேட்டுடலாம்னனு தோனுச்சு.. அதான் தேடுடா சாவிய... தொரடா கடையன்னு கைப்பிள்ள கணக்கா கிளம்பிட்டேன்.

சரி.. விஷயத்துக்கு வரேன்..இதான் அது.

Handicapped by the sports Ordinance biting into their advertising revenues, Nimbus today threatened to pull out of its Rs 2,714 crore five-year telecast deal with the Board of Cricket Council of India (BCCI)

தற்போதைய பிரச்சினை தூர்தர்ஷனின் உலகப்கோப்பை ஒளிபரப்பு நிகழ்ச்சிகள், இந்தியா தவிர மற்ற சில நாடுகளிலும் தெரியப்போவதுதான். இது nimbusக்கு கடுமையான வருமான இழப்பை கொடுக்கும்.

ஆரம்பத்தில் இருந்தே இதில் நமது தூர்தர்ஷன் செய்வது கொஜ்சம் கூட சரியில்லை என்பது என் கருத்து. இன்றைய காலங்களில் கிரிக்கெட் என்பது பார்வையாளரை பொறுத்தவரைதான் விளையாட்டு. ஆனால் அதனை ஒளிபரப்புபவர்களுக்கு அது ஒரு வியாபாரம். மிக கடுமையான போட்டியுள்ள ஒரு வியாபாரம். 50 ஓவர் விளையாடவேண்டிய ஒரு அணி 48 ஓவரில் ஆட்டமிழந்தாலே (அந்த 10 நிமிடத்தில் காட்டவேண்டிய விளம்பரங்களால்) அதனால் ஏற்படும் வருமான இழப்பை பற்றி கவலைப்படும் அளவுக்கு.

அப்படிப்பட்ட வியாபாரக்களத்தில் தூர்தர்ஷன் முதலீடு செய்யாமலேயே அடுத்தவனின் லாபத்தில் ஒரு கனிசமான பங்கை எடுத்துக்கொள்ள முயல்வதாகவே தோன்றுகிறது. மக்களின் நலன் கருதி என்ற பெயரில். இது சரியா? இதற்காக ஒரு சட்டமே இயற்றியுள்ளது எந்த விதத்தில் நியாயம்?
கடந்த காலங்களில் போட்டி நடக்கும் ஒரு வாரத்துக்கு முன் யாராவது பொதுநலமனு ஒன்றை போட்டு அதன் மூலம் நீதிமன்றமும் DDயுடன் ஒளிபரப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும்என்ற தீர்ப்பை வழங்கும். தனியார் தொலைகாட்சிகளுக்கு நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. ஆனால் DDயோ போட்டியைவிட அதிகமாக விளம்பரங்களை ஒளிபரப்பி நல்ல லாபம் பார்க்கும். (ஒரு ஓவரின் முதல் பந்தையும் கடைசி பந்தையும் பார்க்கவே முடியாது.)

இப்போது இந்தியா பங்கேற்கும் எல்லா போட்டியையும் யார் ஒளிபரப்பு உரிமை பெற்றிருந்தாலும் அவர்கள் DDக்கு தங்கள் ஒளிபரப்பை கொடுக்க வேண்டும் என ஒரு சட்டமே இயற்றிவிட்டார்கள். இதில் DDக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் 3/4ஐ அந்த தனியார் தொலைக்காட்சியிடம் DD செலுத்தும். மீதி 1/4 DDக்கு. ஆனால் மொத்ததில் தனியார் தொலைக்காட்சிக்கு பெரும் இழப்பு இது.

வேண்டுமெனில் DDயே நேரடியாக ஒளிபரப்பு உரிமையை பெற வேண்டியதுதானே? அதை ஏன் அவர்கள் செய்வதில்லை? அதேபோல் தனியார் தொலைக்காட்சிகளும் ஏன் DDயை தனியாக விளம்பரங்கள் ஒளிபரப்ப ஒப்புக்கொள்கின்றன என்பதும் எனக்கு புரியவில்லை. தாங்கள் ஒளிபரப்புவதை அப்படியே DD ஒளிபரப்ப வேண்டும் விளம்பரங்களையும் சேர்த்து என கூறுவதுதானே? அதன் மூலம் இவர்கள் விளம்பரங்கள் மட்டுமே ஒளிபரப்பப்படும். யார் எதில் பார்த்தாலும் ஒன்றுதான். வருமான இழப்பு ஏற்படாது என தோன்றுகிறது. இதனால் DDக்கு வருமான இழப்பு கொஞ்சம் ஏற்படலாம். ஆனால் மக்களுக்கு தொண்டு செய்வதற்காக அது அதனை ஒப்புக்கொள்ளும் என நம்புவோமாக :-)

எப்படி பார்த்தாலும் DD செய்வதும் புதிய சட்டமும் தர்மமாகாது என நினைக்கிறேன்.. உங்கள் கருத்து????

4 comments:

Badri Seshadri said...

>>> தற்போதைய பிரச்சினை தூர்தர்ஷனின் உலகப்கோப்பை ஒளிபரப்பு நிகழ்ச்சிகள், இந்தியா தவிர மற்ற சில நாடுகளிலும் தெரியப்போவதுதான். இது nimbusக்கு கடுமையான வருமான இழப்பை கொடுக்கும். >>>

தூர்தர்ஷன் - நிம்பஸ் பிரச்னை உலகக்கோப்பை தொடர்பானதே அல்ல. அது பிசிசிஐ - இந்திய கிரிக்கெட் வாரியம் - இந்தியாவில் நடத்தும் ஆட்டங்களுக்கான தொலைக்காட்சி உரிமம் பற்றியது.

இந்திய அரசு இதில் எடுத்திருக்கும் நிலைப்பாடு கொஞ்சம் சரி, கொஞ்சம் தவறு.

இந்தியாவில் நடத்தப்படும் எந்த ஆட்டத்தையும் கட்டுப்படுத்தும் உரிமை இந்திய அரசுக்கு உண்டு. அந்த ஆட்டங்கள் எந்த மாதிரியான தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசு சட்டம் இயற்றலாம். ஆனால் வேறு நாடுகளில் நடத்தப்படும் ஆட்டங்கள் இந்தியாவில் தூரதர்ஷனில் எப்படியும் காண்பிக்கப்பட்டே தீரவேண்டும் என்று இந்திய அரசால் சட்டம் இயற்ற முடியாது. இப்பொழுது இந்திய அரசு கொண்டுவந்திருக்கும் மசோதா பிரச்னை தரக்கூடியது.

நிம்பஸ் - தூரதர்ஷன் விஷயத்தைப் பொருத்தமட்டில் நிம்பஸ் எதையும் பெரிதாக சாதித்து விடமுடியாது. ஆனால் ESPN, Ten Sports போன்ற வெளிநாடுகளில் நடக்கும் ஆட்டங்களின் தொலைக்காட்சி உரிமம் பெற்றவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வாயிலாக சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்றே இப்பொழுதைக்குத் தோன்றுகிறது.

நாகை சிவா said...

நீ சொல்லுறது சரிதாம்ப்பா!

நம்ம ஆளுங்க நோகாம நொங்கு திங்குறாங்க.....

இருந்தாலும் முக்கால்வாசி தனியார் சேனல்கள் இப்ப பணம் கட்டினா தான் பாக்க முடியும் என்ற நிலை இருக்கு. நம்ம சென்னையே அப்படி தான்.

கேபிள் கணக்கெஷ்னுக்கு பணம் கட்டுவதே பலருக்கு அரிதாக இருக்கும் போது பணம் கட்டி குறிப்பிட்ட சேனல் வாங்கி பாக்க முடியுமா சொல்லு?

இந்த ஒரு பாயிண்ட வச்சு தான் நம்ம ஆளுங்க கோர்ட்டில் மடக்கி நிம்பஸ் பணிய வச்சு இருப்பாங்கனு நினைக்கிறேன்.

நாகை சிவா said...

ஆனாலும் இதை வியாபாரம் ஆக்கிட்ட பிறகு இது எல்லாம் ஒரு மக்கள் அத்தியாசமான விசயமா பாக்க முடியாது.

நம்ம ஆளுங்களுக்கு மக்களுக்கு முக்கியமான பிரச்சனை ஏது என்று பார்த்து அதில் சட்டத் திருத்தும் கொண்டு வருவதில்லை. இது போல தேவையில்லாத விசயங்களில் கவனம் செலுத்துவது தான் வாடிக்கை. அதுக்கு நம்ம மீடியா தான் பக்க வாத்தியம்

மனதின் ஓசை said...

வருகைக்கும் விளக்கத்திற்கும் நன்றி பத்ரி..
//தூர்தர்ஷன் - நிம்பஸ் பிரச்னை உலகக்கோப்பை தொடர்பானதே அல்ல. //
பிரச்னையின் தற்பொதைய நிலையை பற்றிதான் சொன்னேன்..

நீங்கள் சட்ட ரீதியாக பேசுகிறீர்கள். நான் இது சரியான வழியில்லை என கருதுகிறேன். அவர்கள் எடுத்து இருப்பது சரியான தீர்வு அல்ல.

சிவா,
//இந்த ஒரு பாயிண்ட வச்சு தான் நம்ம ஆளுங்க கோர்ட்டில் மடக்கி நிம்பஸ் பணிய வச்சு இருப்பாங்கனு நினைக்கிறேன். //

அதே அதே.. ஆனால் உண்மையான நோக்கம் அதுவாக இல்லாமல் இருப்பதும் பிரச்னை.

//நம்ம ஆளுங்களுக்கு மக்களுக்கு முக்கியமான பிரச்சனை ஏது என்று பார்த்து அதில் சட்டத் திருத்தும் கொண்டு வருவதில்லை. இது போல தேவையில்லாத விசயங்களில் கவனம் செலுத்துவது தான் வாடிக்கை. அதுக்கு நம்ம மீடியா தான் பக்க வாத்தியம்//

சரியாச் சொன்ன போ..