Monday, June 18, 2007

அப்துல் கலாமையே மீண்டும் ஜனாதிபதியாக்கவேண்டும் - ஜெயலலிதா திடீர் கோரிக்கை

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் அப்துல் கலாமையே நிறுத்த வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான மூன்றாவது அணி கோரிக்கை விடுத்துள்ளது. அவரை சந்தித்து போட்டியிடுமாறு கோரப் போவதாகவும், அவரையே ஆதரிக்கப் போவதாகவும் இந்தக் கூட்டணி அறிவித்துள்ளது. இன்று ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த 3வது அணியின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக் கூட்டத்தில் ஜெயலலிதா தவிர, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, இந்திய தேசிய லோக்தள் தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலா, ஜார்க்கண்ட் மோச்சா தலைவர் பாபுலால் மராண்டி, அஸ்ஸாம் கன பரிஷத் தலைவர் பிரிந்தாபன் கோஸ்வாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இன்றைய கூட்டத்தில் 3வது அணிக்கு புதிய பெயரும் சூட்டப்பட்டது. இனிமேல் இந்தக் கூட்டணி ஐக்கிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று அழைக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆகும். இந்தப் பெயரை சூட்டியவர் முதல்வர் கருணாநிதி. இப்போது கிட்டத்தட்ட அதே பெயரில் ஜனநாயகத்தையும் சேர்த்து தனது அணிக்கு பெயர் சூட்டியுள்ளார் ஜெயலலிதா. பாத்திமா பீவி.... முன்னதாக மூன்றாவது அணியின் சார்பில், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அல்லது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், முன்னாள் தமிழக ஆளுநருமான பாத்திமா பீபி ஆகியோரில் ஒருவரை நிறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. டான்சி வழக்கில் ஜெயலலிதா மீது நீதிமன்றமே குற்றம் சாட்டிய நிலையிலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், ஏதோ காரணத்துக்காக, ஜெயலலிதாவையே முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் பாத்திமா பீவி என்பது நினைவிருக்கலாம். கேரளத்தைச் சேர்ந்த பாத்திமா பீவிக்கு வேண்டப்பட்ட மலையாள நிதி நிறுவன அதிபரை மிரட்டியதால் தான் வெங்கடேச பண்ணையாரை எண்கவுண்டரில் போட்டுத் தள்ளியது அதிமுக அரசு என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டதும் நினைவுகூறத்தக்கது. ஆனால், பாத்திமா பீவிக்கு பிற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கிடைக்கவில்லை. அதே போல பரூக் அப்துப்லாவுக்கும் கூட்டணியில் பெரும்பாலானவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து பெண் வேட்பாளரை நிறுத்தி தங்களுக்கு செக் வைத்த காங்கிரசுக்கு பதிலடி தரும் வகையில் அப்துல் கலாமையே மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தக் கோருவது என முடிவெடுக்கப்பட்டது. இதன்மூலம் தேசிய அளவில் தங்களது கூட்டணிக்கு புதிய மரியாதை கிடைக்கும் என ஜெயலலிதா கருதுவதாகத் தெரிகிறது. ஆனால், கலாம் அதை ஏற்காவிட்டால் இந்தக் கூட்டணி யாரை ஆதரிக்கும் என்று தெரியலில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன், சுயேச்சையாக துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் போட்டியிடவுள்ளார். ஆனால், எக்காரணம் கொண்டும் அவரை ஆதரிப்பதில்லை என மூன்றாவது அணியின் முக்கிய கட்சியான முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சி முடிவு செய்துள்ளது. அக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்களின் ஆதரவை இழந்ததால் தான் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் அக் கட்சி தோல்வியடைந்தது. இந் நிலையில் இஸ்லாமியர்களின் வாக்குகளை மனதில் வைத்து இந்த முடிவுக்கு அந்தக் கட்சி வந்துள்ளது. அதே போல சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும் பாஜக வேட்பாளரை ஆதரிக்கத் தயாராக இல்லை.


இதுதாண்டா அரசியல் :-(